ந்தி ஆதிக்கத்தை எதிர்த்துக் களம்கண்ட மதுரை மாணவப் போராளி. இடதுசாரி சிந்தனையுடன் தமிழ்ப் படைப்புகளை வழங்கி வருபவர் களச் செயற்பாட்டாளர். எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். தன்னை நோக்கி இலக்கிய உலகில் இருந்து ஏவப்படும் கணைகளை துணிந்து எதிர்கொண்டு, சட்டரீதியான நடவடிக்கைகளுக்கும் தயாராகிவரும் அவரை நக்கீரன் பேட்டி கண்டது.

* உங்கள் எழுத்துக்களை ஜெயமோகன் முதிரா எழுத்து என்கிறாரே?’’

Advertisment

இந்த விமர்சனமே அவரது முதிர்ச்சி இன்மையைத்தான் காட்டுகிறது. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அண்மையில் எழுதிய ’"தமிழ்ச் சிறுகதைகளின் அரசியல் பா.செயப்பிரகாசம்' என்ற கட்டுரையை ஜெயமோகன் வாசித்து இலக்கிய மதிப்பீடு என்பதின் "அ'னா, "ஆ'வன்னா அரிச்சுவடியைக் தெரிந்துகொள்ளட்டும். குறிப்பிட்ட எந்தப் படைப்பையும் இது சரியானது என்றும் சரியில்லாதது என்றும் உரிய காரணங்களைச் சுட்டிக்காட்டி, எவர் வேண்டுமானாலும் விமர்சிக்க லாம். ஆனால் தொடர்ந்து படைப்பிலக்கியத் தளத்தில் இயங்கி வருகிற என்மீது, ஒட்டு மொத்தமாக ஒரு உள்நோக்கத்தை வைத்துக் கொண்டு இயங்கும் இப்படிப்பட்ட விமர்சனங்கள், அதை வைப்பவரின் தகுதி இன்மையைத்தான் காட்டுகிறது. என் எழுத்துக்களுக்கு ஜெயமோகனின் சான்றிதழ் தேவையில்லை. எனக்கு அவர் போலி எழுத்தாளர் என்ற பட்டத்தையும் கொடுத்திருக்கிறார். மக்களின் வாழ்க்கையை எழுதாமல், போலித்தனமாக கட்டுமானங்களின் அடிப்படையில் உருவான புராணங்கள் சார்ந்த புனைவுகளைச் சித்தரிக்கும் அவர்தான் உண்மையிலேயே அந்தப் பட்டத்துக்கு பொருத்தமானவர்.

ss

* உங்கள் அரசியல் செயல்பாடுகளையும் ஜெ.மோ. விமர்சித்திருக்கிறாரே?

நான் வாழ்வியல் பாடங்களிலிருந்து அரசியலைக் கற்றுக்கொண்டவன். அவரோ தனக்குப் போதிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தங்களைப் பாடமாகக் கற்றவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்த போதே என் அரசியல் தொடங்கிவிட்டது. 1965-ல் நான் இளங்கலை படித்தபோது, அங்குதான் இந்தி எதிர்ப்பு போராட்டம் முதலில் வெடித்தது. அங்கு மாணவர்களாக இருந்த முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் கா.காளிமுத்துவும் கவிஞர் நா.காமராசனும் ஜனவரி 25-ல் சட்ட நகலுக்குத் தீ வைத்தார்கள். சட்ட எரிப்புக்கு முன் கைதாகி விடக் கூடாது என்பதற்காக தலைமறைவாக இருக்கச் செய்து நானும் கவிஞர் இன்குலாப் போன்றவர்களும் வெளியே இருந்து ஒருங்கிணைப்பு செய்தோம். சனவரி 25-அன்று பேரணியில் சென்ற மாணவர்கள்மீது மதுரை வடக்குமாசி வீதியில் இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து கொடூரத் தாக்குதல் நடந்தது. மதுரையில் மாணவர்களை வெட்டி விட்டார்களாம் என்ற செய்தி கேட்டு அந்தப் போராட்டம் தமிழகம் முழுக்கப் பரவியது. அப்போதைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 500 மாணவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று வரலாற்றுப் பேராசியர் அ.ராமசாமி பதிவு செய்திருக்கிறார். ஆனால் அரசின் புள்ளி விபரக் கணக்கோ 90 மாணவர்கள் மட்டுமே கொல்லப் பட்டதாக, சுருக்கியது. இதைத் தொடர்ந்து பெ.சீனிவாசன், கா.காளிமுத்து, நா.காமராசன், நாவளவன், ராஜாமுகமது, மருத்துவ மணவர் சேது, நான் உள்ளிட்ட 10 பேரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டைச் சிறையில் 3 மாதம் அடைத்தார்கள். அன்றைய மாணவர்களின் போராட்டம்தான் 67-ல் தி.மு.க ஆட்சிமலர விதையாக அமைந்தது. என் கல்லூரிப் பருவம் திராவிட இயக்க அரசியலில் என்னை இயங்கவைத்தது.

*நீங்கள் மார்க்சிய தடத்தில் பயணமானது எப்படி?’’

ss

அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சியில், அடிப்படை உரிமைகளுக்கான தொழிலாளர்கள் போராட்டம் பரவியது. இதை குசேலர், வி.பி.சிந்தன், ஏ.எம்.கோதண்டராமன், மேயர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் முன்னெடுத்தார்கள். அது என்னையும் கவிஞர் இன்குலாப்பையும் ஈர்த்தது. மேயர் கிருஷ்ண மூர்த்தி, ஒருநாள் இரவு அறிஞர் அண்ணா வீட்டுக்கு வந்து தொழிலாளர்கள் படும் துயரங் களை எல்லாம் அவரிடம் விவரித்தார். ’தொழி லாளர்கள் படும் துயரங்களைக் கேட்டபோது என்னால் இரவெல்லாம் தூங்கவே முடியவில்லை என்று மறுநாள் அண்ணா நெகிழ்ந்துபோய் எழுதினார். இந்த நிலையில் கீழ வெண்மணிப் படுகொலை அரங் கேறியது. அதனால் எனக்கும் இன்குலாப்புக்கும் அரசியல் பார்வை மாறியது. எங்கள் செயல்பாடுகள் மார்க்சிய அரசியலை நோக்கி நகர்ந்தது. இப்படியாக வாழ்க்கைதான் என் பயணத்தைத் தீர் மானித்து. இது எல்லாம் ஜெயமோகனுக்குத் தெரிந்திருக்க வாய்பில்லை.

* நீங்கள் அரசு அதிகாரியாக இருந்து கொண்டே நக்சல் இயக்கத் தொடர்பில் இருந்தீர்கள் என்றும், விசாரணை களில் இருந்து தப்பிப் பாதுகாப்பாக இருந்து கொண்டீர்கள் என்பதும் அவரது குற்றச்சாட்டு?’’

நானும் இன்குலாப்பும் மார்க்க்சியத்தை ஏற்றுக்கொண்ட நிலையில். நான் என் மகன் சூரியதீபனின் பெயரைப் புனைபெயராக்கிக் கொண்டு எழுதினேன். அப்போதுதான் "மன ஓசை' இதழை 81-ல் தொடங்கி 91வரை 10 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினோம். மார்க்சிய லெனினிய கம்யூனிஸ்ட் கட்சியினர், ரயில் நிலையம், பேருந்து நிலையம் என்று அந்த இதழை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். ஏறத்தாழ 20 ஆயிரம் பிரதிகள்வரை அந்த இதழ் விற்றது. நான் அரசுப் பணியில் இருந்தவன் என்பதால் என்னையும் கடுமையாக விசாரித்தார்கள். அரசுக்கு எதிரானவனாக இருப்பேனோ என்று பலவகையிலும் ஆராய்ந் தார்கள். கடைசியில் எனது அரசியல் சார்பு, செயல்பாடு களுக்கான சான்றுகள் நிரூபிக்க இயலாததால் என் மீதான விசாரணையைக் கைவிட்டார்கள். நான் விசாரிக்கப்படவில்லை என்று ஜெயமோகன் சொல்வது பொய்.

*அரசு அலுவலராக இருந்துகொண்டு அரசை விமர் சித்தீர்கள் என்றும் சொல் கிறாரே?

அதிலே என்ன தவறு? அரசுத் துறையில் இருப்பவர்கள் அரசை விமர்சிக்கக் கூடாது என்பதும், ஒரு முதலாளியின் கீழ் வேலை செய்பவர்கள் அவரைப் பற்றிய ஆதங்கத்தை வெளிப்படுத்தக் கூடாது என்பதும், ஒடுக்குமுறைக்கான வரையறை. இதுதான் பாசிசத்தின் குரல்.

*நீங்கள் சாதிய உணர்வுடன் இயங்குகிறவர் என்ற குற்றச்சாட்டையும் அவர் வைத்திருக்கிறார்?’’

நான் சாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன். அந்த உணர்வை என் அருகில் கூட நான் வரவிட்டதில்லை. இது என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும். நான் என் மகனுக்குக் கலப்புத் திருமணம் செய்துவைத்திருக்கிறேன். அந்தக் காலத்திலேயே என் தங்கைக்கும் புரட்சிகரத் திருமணத்தை புரட்சியாளர்கள் முன்னிலையில் நடத்தியிருக்கிறேன். "கொலை செய்யும் சாதி' என்று அழுத்தமாக சாதியதை எதிர்த்து நான் எழுதிய நூல் ஒரு சாட்சி .

*’’சரி உங்கள் மீது அவருக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’

அவர் இந்துத்துவா சித்தாந்தத்தில் ஊறியவர். அவருடைய சிந்தாந்தத்துக்கு, முற்போக்குச் சித்தாந்தம் எதிரானது. அதனால்தான் பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர், கலைஞர் என்று மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடிய போராளிகளையும், அரசியல் தலைவர்களையும் அவர் தொடர்ந்து தாக்கி, இழிவு செய்து வருகிறார். அதைப் போலத்தான் தமிழ்ச் சூழலில் இயங்கும் படைப்பாளிகளையும், சமூகச் செயற்பாட்டாளர்களையும் அவர் தாக்கிவருகிறார். மார்க்கிய அறிஞர், எழுத்தாளர் எஸ்.வி.ராசதுரை கிறித்துவ மிஷனரிகளிடம் நிதி வாங்கினார் என்று அவதூறாக எழுதினார். பாவம், அவர் தனக்கென சொந்தமாய் ஒரு வீடோ, ஒரு சென்ட் நிலமோ இல்லாத ஒரு எழுத்தாளர். ஜெயமோகன் மீது எஸ்.வி. ஆர். போட்ட அவதூறு வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. வன்மத்தோடு என்மீது அவதூறு பரப்பிய ஜெயமோகன் மீது சட்டரீதியிலான நடவடிக்கையைத் தொடங்கிவிட்டேன்.

*நீங்கள் சாகித்ய அக டமிக்கு முயன்றுகொண்டே இருப்பதாகவும் சொல்லியிருக்கிறாரே?’’

இதைவிட மோசமான நகைச்சுவை வேறொன்று இருக்க முடியாது. அரசாங்கங்களின் இயல்பை அறிந்தவன் என்பதால் அரசுகள் கொடுக்கும் எந்த விருதையும் வாங்கமாட்டேன் என்று ஏற்கனவே அறிவித்தவன் நான்.

*’’இது போன்ற சூழல் இங்கே நிலவுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மார்க்சியர்களும், பெரியாரியவாதிகளும், அம்பேத்காரியர்களும் ஏனைய முற்போக்குச் சிந்தனையாளர்களும் கலை இலக்கியத் தளத்தில் ஒருங்கிணைந்து நிற்கவேண்டிய காலமிது. பாஸிசம் எந்த வகையில் வந்தாலும், முற்போக்கை முன்வைத்து எல்லோரும் கை கோர்க்க வேண்டும். ஜெயமோகன் போன்றவர்கள் வெளிப்படுத்தும் பிற்போக்குச் சிந்தனைகளை இனியேனும் சகித்துக்கொள்ளாமல், உரிய எதிர்வினையை உடனுக்குடன் கருத்தியல் தளத்தில் நிகழ்த்தவேண்டும். இல்லை என்றால் நமக்குக் காயங்கள்தான் மிஞ்சும். இது இன்று நேற்றோடு முடிவதில்லை. இது ஒரு தொடர் ஓட்டம், ஓடாமலிருந்தால் தோற்றுப் போவோம்.

-தமிழ்நாடன்